டெல்லியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
டெல்லியில் நான்கு அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதி எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று மாலை அங்குள்ள 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் நான்கு புறமும் தெறித்து ஓடினர்.
தகவலறிந்து 8 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு இதே பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் உரிமையாளரும் அவருடைய மகனும் உயிரிழந்தனர். இருப்பினும் இதுபோன்ற மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் உள்ள ஆபத்துமிக்க கட்டடங்களை இடிக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என
அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications