4 மனைவிகள், 40 குழந்தைகள், 3 விவாகரத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: சாக்ஷி மகராஜ்
இந்திய மக்கள் தொகை பற்றிய பாஜக பாரளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்: 4 மனைவி உள்ளவர்கள் தான் மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மீரட் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியதாவது: இந்தியாவின் மக்கள் தொகை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. அதற்கு, "யாரெல்லாம் 4 மனைவிகள், 40 குழந்தைகள், 3 விவகாரத்து முறைகளை பின்பற்றுகிறார்களோ அவர்களே காரணம்" என்று தெரிவித்தார்.
மேலும் பெண்கள் குழந்தைகள் பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல, இந்துக்களின் மக்கள் தொகை குறைந்தால் நாடு பிளவுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாக்ஷி மகராஜின் கருத்துக்கு காங்கிரஸ், பகுஜன் ஜமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சாக்ஷி மகராஜ் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.