‘பஜ்ரங்கி பைஜான்’ பாணியில் 14 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினார் கீதா
டெல்லி: பெற்றோர்களைப் பிரிந்து 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வந்த இந்திய பெண் கீதா, 23 இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் இரு நாட்டு தூதர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவில் இருந்து 14 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூருக்கு சென்ற ரயிலின் ஒரு பெட்டியில் சிறுமி ஒருத்தி அனாதையாக அழுதபடி நின்று கொண்டிருந்தாள். சிறுமிக்கு அப்போது 9 வயது இருக்கும். மாற்றுத்திறனாளியான அந்த சிறுமியால் பேச முடியாது. காது கேட்கும் திறனும் கிடையாது. இதனால் சிறுமியால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடியவில்லை.
சிறுமியை மீட்ட போலீஸார் கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற்போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை கண்டுபிடிக்க எதி அறக்கட்டளை பல்வேறு முயற்சிகளை செய்தும் பலன் அளிக்கவில்லை.
சல்மான்கான் படம்
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘பஜ்ரங்கி பைஜான்' என்ற இந்தி திரைப் படம் கடந்த ஆகஸ்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வழிதவறி வந்த வாய் பேச முடியாத சிறுமியை சல்மான் கான் மீட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதை மையமாக வைத்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
கீதா விவகாரம்
பாகிஸ்தானில் தவிக்கும் கீதாவின் கதையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப் பட்டதாக இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கீதா விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.
பீகாரில் பெற்றோர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உத்தரவுபடி பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ராகவன், இளம் பெண் கீதாவை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து எடுக்கப் பட்ட முயற்சியின்பேரில் கீதாவின் பெற்றோர் பீகாரில் இருப்பது கண்டறியப்பட்டது.
நாடு திரும்பல்
இருநாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகு சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கீதா இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு வந்தடைந்தார். கீதாவுடன் எதி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் முறைப்படி பெற்றோரிடம் கீதாவை ஒப்படைக்க மரபணு சோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சோதனை முடிவில் அவரது பெற்றோர் தான் என உறுதியாக தெரியும் வரை கீதா உடன் தங்கியிருக்க தொண்டு நிறுவனத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். கீதாவை பிரிவதில் எங்களுக்கு வருத்தம்தான், ஆனால் அவர் தனது பெற்றோர், சொந்த மக்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எதி அறக்கட்டளை யைச் சேர்ந்த சபா எகி கூறியுள்ளார்.
|
இன்றுதான் தீபாவளி
சிறுமியாக காணமல் போய் குமரியாக தாயகம் திரும்பியுள்ள கீதாவை வரவேற்க அவரது சொந்த கிராமம் தயாராக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், எங்கள் கிராமம் இன்று தீபாவளியை போன்ற உணர்வை தருகிறது என்று கீதாவின் தந்தை ஜனார்தன் மஹ்டோ கூறியுள்ளார்.
மகள் வீடு திரும்பினாள்
கீதா நாடு திரும்பியது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், "ஒரு மகள் வீடு திரும்பிவிட்டாள். எதி அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கீதா டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார். புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
கீதாவுக்கு குடியுரிமை...
கீதா இந்திய பிரஜை என்பதை உறுதி செய்ய எந்த ஆவணமும் இல்லாததால் அவருக்கு இந்திய அரசியல் சாசன பிரிவு 13-ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.