ரயில் விபத்தில் 2 கைகளையும் இழந்த மாணவி பிளஸ் டூ தேர்வில் 63% மார்க்: பி.காம். படிக்க விருப்பம்
மும்பை: ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது மாணவி மோனிகா பிளஸ் டூ தேர்வில் 63 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு மும்பையின் புறநகர் பகுதியான கட்கோபரைச் சேர்ந்தவர் மோனிகா(17). அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கட்கோபர் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். பிளாட்பாரத்திற்கும், புட்போர்டுக்கும் இடையே உள்ள இடத்தில் விழுந்த மோனிகா படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவர் இரண்டு கைகளையும் இழந்தார்.
அவருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் அவர் பிளஸ் டூ தேர்வை கட்கோபரில் உள்ள சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளியில் எழுதினார். அவர் விடைகளை சொல்லச் சொல்ல அவர் சார்பில் 11ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா எழுதினார்.
இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் காமர்ஸ் பிரிவை எடுத்து படித்த மோனிகா 63 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து மோனிகா கூறுகையில்,
தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்காக தேர்வு எழுதிய ஐஸ்வர்யாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பி.காம். படிக்க விரும்புகிறேன் என்றார்.
மோனிகாவின் தந்தை அசோக் மோரே கூறுகையில்,
என் மகள் எங்களை பெருமைப்பட வைத்துவிட்டார். அவருக்கு செயற்கைக் கைகள் பொருத்தப்பட்டபோதிலும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுத வேண்டும் என்பதால் வேறு ஒருவரை எழுத வைத்தனர் என்றார்.