"சரக்கு"க்கு பாபி, ஜூலினு பேர் வைங்க.. கலெக்ஷன் அள்ளும்.. பாஜக அமைச்சரின் "பயங்கர" ஐடியா
மதுபானங்களுக்கு பெண்களின் பெயர்களை வைத்தால் அதன் விற்பனை அதிகரிக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.
மும்பை: மதுபானங்களுக்கு பெண்களின் பெயர்களான பாபி, ஜூலி உள்ளிட்ட பெயர்களை வைத்தால் அதன் விற்பனை அமோகமாக இருக்கும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நந்துபார் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மகாராஷிடிர மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தற்போது பெரும்பாலான பொருள்களுக்கு பெண்களின் பெயர் வைக்கப்படுகின்றன.
புகையிலை பொருள்களுக்கு பெண்களின் பெயரை வைத்தவுடன்தான் அதன் விற்பனை ஜரூராகியது. மதுபான பொருள்களும் விற்பனையில் முதலிடம் பிடிக்க வேண்டுமானால் மகாராஜா என்ற பெயருக்கு பதிலாக மகாராணி என்று பெயர் வைத்து பாருங்கள்.
கண்டனம்
அதேபோல் பாபி, ஜூலி என பெண்களின் பெயர்களை வைத்தால் மதுபான விற்பனை சூடு பிடிக்கும் என்றார் அவர். இவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராட்டம்
அமைச்சரின் இந்த கருத்து குறித்து சிவசேனை தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்க பக்கத்தில் குறிப்பிடுகையில், மகாராஷ்டிரத்தில் ஏராளமான பெண்கள் மதுவிற்பனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் அமல்
இதை தெரிந்தும் அமைச்சர் மகாஜன் மதுபானங்களுக்கு பெண்களின் பெயரை வைக்கலாம் என பேசியது துரதிருஷ்டவசமானது. கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
|
பிரதமர் பாராட்டு
முதல்வர் நிதிஷ்குமாருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மோதல் இருந்த போதிலும் மதுவிலக்கை அமல்படுத்தியதை பிரதமர் பாராட்டியிருந்தார். ஆனால் மகாராஷ்டிரத்தில் பாஜக கட்சியின் அமைச்சர் மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சிவசேனை குறிப்பிட்டுள்ளது.