தீவிரவாதத்தின் தென்னிந்திய மையமாக விஸ்வரூபமெடுக்கும் "கடவுளின் தேசம் கேரளா"
திருவனந்தபுரம்: கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரை 22 தீவிரவாத வழக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அங்கு ஐஎஸ்ஐஎஸ்சில் சேருவது, தீவிரவாத பிரச்சாரத்தில் ஈடுபடுவது, தீவிரவாதத்திற்கு பணம் பறிமாறப்படுவது உள்ளிட்ட தேசத்திற்கு எதிரான பல நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் தற்போது தென் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்றும், அவை அனைத்தும் கேரளாவில் காளான்கள் போல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாகவே இங்கு தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர் கேரள போலீசார்.
ஹவாலா பணம் புழங்கும் மாநிலங்களில் கேரளா முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதேபோன்று வளைகுடா நாடுகளில் இருந்து அதிக அளவில் இங்கு பணம் வருகிறது. இந்தப் பணம் தீவிரவாதத்திற்கு மடை மாற்றப்படுவதாகவும் உளவுத் துறையினர் கூறுகின்றனர்.
இதுவரை கேரளாவில் அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தீவிரவாத அமைப்புகள் தற்போது அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய சர்வ தேச தீவிரவாத அமைப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் 20 பேர் கேரளாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதே இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
மேலும், காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவிற்காக சண்டை போட்டவர்களில் இரண்டு பேர் கேளரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பாவிற்காக காஷ்மீரை சேராத கேரளத்தைச் சேர்ந்தவர்கள் சண்டையிட்டது இதுதான் முதல்முறை. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது கேரளா தீவிரவாதத்தின் தென்னிந்திய மையமாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.