தென்மேற்குப் பருவமழை 106% பொழியும்: நல்ல சேதி சொன்ன வானிலை ஆய்வு மையம்
டெல்லி: நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி சொல்லி விவசாயிகள் மனதில் நம்பிக்கை விதையை தூவியுள்ளது.
நாட்டின், 80 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை நீடிக்கும். இதன்மூலமாக, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி இல்லை. இதனால், வறட்சி ஏற்படும் சூழலும் காணப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என்றும், 106% பருவமழை பதிவாகும் என்றும், டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளை பாதித்து வந்த எல் நினோ பருவநிலை மாற்றம், படிப்படியாக, வலுவிழந்து வருவதால், பருவமழை பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர் வறட்சி
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மட்டும் அல்ல, பொதுமக்களிடமும் இருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடு தொடர் வறட்சியை சந்தித்து வந்திருப்பதால் இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்ற அச்ச உணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நம்பிக்கை
ஏனெனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்பு, விவசாயம் மூலம்தான் வருகிறது. மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் விவசாயம் மூலம்தான் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். 40 சதவீத சாகுபடி பரப்பளவு நீர்ப்பாசத்தின்கீழ் வருகிறது என்பதால் பெரும்பாலான மக்கள், பருவ மழையை நம்பி உள்ளனர்.
106 சதவிகிதம் பொழியும்
இத்தகைய சூழலில் இந்த ஆண்டில் பருவ மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு துறை கணித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இயக்குனர் லட்சுமன் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசும் போது, 106 சதவீதம் ஆக இருக்கும். அதில் 94 சதவீதம் மழை பெய்வதற்கு, வாய்ப்பு உள்ளது. இது இயல்பை விட அதிக அளவாகும் என்று கூறியுள்ளார்.
எங்கு அதிகம்
ஆனால் வட கிழக்கு இந்தியா, தென் கிழக்கு இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் இயல்பை விட பருவமழை சற்றே குறைவாக இருக்கும். வறட்சியால் தவிக்கிற மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நல்ல மழை பெய்யும். மேற்கு கடலோர பகுதிகளிலும், மத்திய மண்டல பகுதிகளிலும் பருவ மழை நன்றாக பெய்யும். சில இடங்களில் மழை மிக அதிகமாக இருக்கும்.
பலத்த மழை
எப்போது இயல்பை விட அதிகளவில் மழை இருக்கிறதோ, அப்போது பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதை பிராந்திய அளவில்தான் கணிக்க முடியும். ஆனால் நாம் அத்தகைய நிலைமைக்கு தயாராக இருக்க வேண்டும்.
விவசாயிகள் ஆறுதல்
மழை பெய்யும் விதம் குறித்த தகவல்களுடன்கூடிய இரண்டாவது கணிப்பை ஜூன் மாதம் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார் லட்சுமன் சிங் ரத்தோர் இந்த ஆண்டு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருப்பது விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இயல்பான மழை
அதே நேரத்தில் மத்திய வேளாண்துறைச் செயலாளர் ஷோபனா கே. பட்நாயக், நடப்பாண்டு பருவநிலையில் ஒரு சில மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு இயல்பாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் தயாராகுங்கள்
எனவே காரீஃப் பயிர்களான அரிசி மற்றும் பருப்பு வகைகளை பயிரிடுவதற்குத் தேவையான விதைகள், உரங்கள், வேளாண் பொருள்கள் ஆகியவற்றை விவசாயிகள் முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை
போதிய மழை இல்லாததால் கடந்த 2014-15-ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி மிகவும் குறைந்த அளவே இருந்தது. மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உற்சாகத்தில் பங்குச்சந்தை
நடப்பு சீசனில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. இதனால், வேளாண் உற்பத்தி அதிகரித்து, வங்கி வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது என்றும், தகவல் வெளியானது.
பங்குகள் விலை அதிகரிப்பு
இதையடுத்து, முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளை வாங்க தொடங்கியதால், சந்தைகளும் உயர்ந்தன. முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்திருந்தன.
உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 123 புள்ளிகள் அதிகரித்து, 25,145 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 7,709 புள்ளிகளாக முடிவுற்றது.