என்னதான் மும்பையில் மழை கொட்டினாலும், நாடே சென்னையைத்தான் கவனிக்குதுங்க!
சென்னை: மும்பையில் என்னதான் மழை பெய்தாலும், அது நாட்டு மக்கள் கவனத்தை சென்னையில் பெய்யும் மழை போல ஈர்ப்பதில்லை என்பதை கூகுள் டிரெண்ட் சொல்கிறது.
மும்பையில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் கன மழை கொட்டுவது வாடிக்கைதான். கடந்த வருடம் மழை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடியது.
ஆனால் இம்முறை ஒரே நாளில் மழை ஊற்றித் தள்ளிக்கொண்டுள்ளது. ஆனாலும், சென்னை மழை பற்றி அறிந்துகொள்ளத்தான் மக்கள் கூகுளை மொய்க்கிறார்கள் என்பதை 2004ம் ஆண்டு முதல் இப்போதுவரையிலான கூகுள் டேட்டாவே காட்டிக்கொடுக்கிறது.
வாடிக்கை
மும்பையில் பெய்யும் மழை என்பது வாடிக்கையான நிகழ்வாக மக்களால் பார்க்கப்படுவதாலா அல்லது சென்னைதான் அதிக கவனத்தை ஈர்க்கிறதா என்பது கேள்விக்குறி.
வர்த்தக தலைநகர்
கண்டிப்பாக நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பை பற்றி அறியவே நாட்டிலுள்ள பலரும் அதிகம்பேர் ஆர்வம் காட்டுவர். ஆனால் சென்னையை பற்றிதான் அவர்கள் அதிகம் தேடியுள்ளனர். இது சென்னையில் எப்போதாவது பெய்யும் மழையால் ஏற்பட்ட ஈர்ப்பினால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது.
வெள்ள பாதிப்பு
அதிலும் 2015 டிசம்பரில் சென்னை மழை என்பது அதிகப்படியான தேடுதலை ஈட்டியுள்ளது. அது கூகுள் சர்ச்சில் புது உச்சம் தொட்டுள்ளது. ஏனெனில் ஒரே நாளில் பெய்த சுமார் 50 செ.மீ மழை காரணமாக அப்போது சென்னையின் பல பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஹெலிகாப்டரில் ராணுவம் உணவு பொட்டலங்களை வீசியது. இதுபோன்ற காரணங்களால் தேசிய கவனத்தை மிக அதிகமாக ஈர்த்தது சென்னை வெள்ளம்.
கூகுள் டிரெண்ட்
அது கூகுள் டிரெண்டிலும் அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் மும்பையில் இதுவரை போதிய மழை பெய்யாமல் இந்த ஆண்டு மக்கள் கஷ்டப்பட்டனர். இப்போது பெரு மழை பெய்துள்ளது அவர்கள் தண்ணீர் கஷ்டத்தை போக்குவதாக அமையும் என்றபோதிலும், விடாத மழை அவர்களுக்கு அவஸ்தையை கொடுத்துள்ளது.