பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை!
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழுக்குப் பதில் ஆதார் அல்லது பான் அட்டையை காண்பிக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்கும் வகையில் சில எளிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் சட்டத்தின்படி, 26.1.1989க்குப் பின் பிறந்தவர்கள், பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி, பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை.
சான்றிதழ்
அதற்கு பதிலாக, பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள பத்தாம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களையோ, பள்ளிகள் வழங்கும், டி.சி.,யையோ சமர்ப்பிக்கலாம்; பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள, பான் கார்டு, ஆதார் கார்டு, வாகனஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யலாம்.
விவாகரத்து சான்று
அரசுப் பணியாளர்கள் தங்களது சேவைப் பதிவேடுகள், பென்சன் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். விவாகரத்தான பெற்றோரின் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் பெறும்போது விவாகரத்து பெற்றதற்கான சான்றிதழ்களையும் காண்பித்து பாஸ்போர்ட் விண்ணபிக்கலாம்.
ஹிந்தி, ஆங்கிலம்
ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற இல்லத்தில் இருந்த பிறப்பு தேதியை உறுதிபடுத்துவதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். மேலும் புதிய பாஸ்போர்ட்டில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுய விவரங்கள் பதிவிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி உண்டு
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 8 வயதிற்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் 10 சதவீதம் வரை பாஸ்போர்ட் கட்டணத்தில் தள்ளுபடி பெறுவர். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரைக் குறிப்பிட வேண்டும், கணவன், மனைவி பிரிந்து வாழும் சூழலில் தாய் அல்லது தந்தையின் விவரத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.