உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்: பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு !
டேராடூன்: வரும் 28 -ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் அமைச்சரவைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர். அவர்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தி விட்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்து, பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வரவும் அவர்கள் தயாராகி விட்டனர்.
இந்நிலையில் சட்டசபையில் தங்களுக்கு தான் மெஜாரிட்டி இருப்பதாகவும், காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
அதேசமயம், முதலமைச்சர் ஹரீஷ் ராவத்தும் தங்களிடம் மெஜாரிட்டி இருப்பதாக கூறுகிறார்.சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலகத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு குழப்பமான சூழல் நிலவி வருகிறது. எனவே
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மார்ச் 28-ம் தேதி சட்டசபையில் முதலமைச்சர் ராவத் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கிருஷ்ணகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ராஜ்பவன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
71 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைியில் காங்கிரசுக்கு 36, பா.ஜ.க.வுக்கு 28, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2, சுயேட்சைகள் 3, உத்தரகாண்ட் கிராந்திதளம் 1 என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர்.