பொய் சொல்லும் பாஜக.. தாமரைக்கு ஓட்டு போடாதீங்க.. குஜராத் தேர்தலில் குதித்த விவசாய அமைப்பு-தலைவலி
காந்தி நகர்: குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் புது தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக பொய் சொல்கிறது எனக்கூறி குஜராத் மாநிலம் முழுவதும் சம்யுக்த் கிஷான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பினர் களமிறங்கி உள்ளனர்.
குஜராத்தில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டிகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் டிசம்பர் ஒன்றாம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் டிசம்பர் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. மூன்று கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை துவங்கி உள்ளனர்.

தீவிர பிரசாரம்
குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் இவர்கள் 2 பேரும் பல்வேறு பிரசார உத்திகளை வகுத்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

பாஜகவுக்கு எதிராக பிரசாரம்
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினர் மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜகவுக்கு எதிராக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) களமிறங்கி உள்ளது . விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சம்யுக்த் கிஷான் மோர்ச்சா பிரசாரத்தை துவங்க உள்ளது. இந்த அமைப்பு விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்ததில் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் குஜராத் தேர்தல் பற்றி அந்த அமைப்பினர் கூறியதாவது:

பிரசாரம் ஏன்?
எங்கள் அமைப்பு சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அரசியல் கட்சிகளை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளோம். பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளோம். டெல்லி விவசாய போராட்டத்தின்போது பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியவர்கள் அதனை செய்யவில்லை. விவசாயிகளின் போராட்டங்களை வாபஸ் பெறுவதற்கு முன்பு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பிரசாரத்தின் மூலம் எடுத்து கூற உள்ளோம்.

46 ஆயிரம் வழக்குகளை திரும்பபெற
மேலும் விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டம், அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ5,000 ஓய்வூதியம் வழங்கவும், போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட சுமார் 46,000 வழக்குகளை திரும்ப பெறுதல் மற்றும் போராட்டத்தின் போது இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம்.

பயிர் கடன் தள்ளுபடி
மேலும் விவசாய கடன், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான அறிவிப்பை கூறும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்த உள்ளோம். பருத்தி, நிலக்கடலை விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்து கூற உள்ளோம். அதோடு விவசாயின் பயிர் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது பற்றியும், ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் மனு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு வலியுறுத்துகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications