பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கிடையாது- குஜராத் ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: படேல் பிரிவினரின் போராட்டத்தையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து குஜராத் அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தில் உள்ள படேல் சமூகத்தினர், தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கக் கோரி ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதனால் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு படு தோல்வி ஏற்பட்டது.
குஜராத்தில் விரைவில் வரவுள்ள சட்டசபை தேர்தலில், இதன் தாக்கம் இருக்கும் என்பதால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு வேலை மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க குஜராத் அரசு கடந்த மார்ச் 1ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது.
இதை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் சிலர் மனு செய்தனர். இதை தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் வாதிடுகையில், பொதுப் பிரிவினருக்கான இடத்தில்தான் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஓதுக்கீட்டு பிரிவினருக்கான இடத்தில் வழங்கப்படவில்லை என கூறியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவே அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.
குஜராத் அரசு பிறபித்துள்ள அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. இந்த இட ஒதுக்கீடு மூலம், ஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அளவு மீறப்பட்டுள்ளது. அதனால் இந்த அவசர சட்டம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
குஜராத்தில் முதல்வர் மாற்றம் நடக்க உள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது, அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, முதல்வருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் நிதின் படேல், 10 சதவீத ஒதுக்கீடு என்பதில் அரசு உறுதியாக உள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வோம் என்று கூறியுள்ளார்.