ஹரித்துவார், ரிஷிகேசைப் போல குஜராத்தின் பாலிதானாவும் சைவ நகரமாகிறது!
பாவ்நகர்: இந்துக்களின் புனித நகரங்களான ஹரித்துவார், ரிஷிகேசைப் போல ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டு தலமான பாலிதானாவும் முழுமையான சைவ நகரமாக மாற இருக்கிறது.
இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் காசி, ஹரித்துவார், ரிஷிகேசம் சென்றுவர விரும்புவர். இதேபோல் ஜெயின் சமூகத்தினரின் புனித தலமாக இருப்பது குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா.
மலைக்கோயில்கள்
பாலிதானா மலையில் ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இம்மலைக்கு 3,745 படிக்கட்டுகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். 1800 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் 3,745 படிக்கட்டுகளைத் தாண்டி எப்படி இத்தனை ஆயிரம் கோயில்களைக் கட்டி முடித்தார்கள்.. கட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது வியப்பதைத் தரும்.
ஜெயின் துறவிகள்
அதேபோல் பாலிதானா நகரில் எங்கெங்கும் ஜெயின் துறவிகள்தான்! அதுவும் படித்த இளம்பெண்கள், முதியவர்கள் என வயது பாகுபாடின்றி துறவிகளானவர்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வாழ்கின்றனர்.
ஆச்சரியமூட்டும் வாழ்க்கை
இவர்களது துறவு வாழ்க்கை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கும். பொது இடங்களில் சமைக்கப்படும் இவர்களுக்கென தனியாக சமைக்கப்படும் உணவைத்தான் சென்று வாங்கி வந்து உண்கின்றனர். தங்களது தலைமுடியை தாங்களாகவே கைகளால் பிய்த்து எறிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். வெள்ளை உடைதான் இவர்களுக்கான வாழ்க்கையாகவும் இருக்கிறது.
வாழ்நாள் கடமை
பாலிதானா புனித தலத்துக்கு வருவதை தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளனர் ஜெயின் சமூகத்தினர். இந்நகரத்தில் சிறுபான்மையினரும் வசித்து வருகின்றனர்.
ஜெயின் துறவிகள் போராட்டம்
தற்போது ஹரித்துவார், ரிஷிகேசம் போன்ற புனித நகரங்களில் அசைவத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல பாலிதானாவிலும் அசைவத்துக்கு முழுமையான தடை விதிக்க கோரி ஜெயின் துறவிகள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தற்போது பாலிதானா கோயில் வளாகத்தில் 100 மீட்டர் சுற்றளவுக்குத்தான் அசைவ உணவுக்கு தடை இருக்கிறது.
விரைவில் சைவ நகரம்
இந்த போராட்டத்தின் போது குஜராத் அரசு தரப்பில் விரைவில் பாலிதானவை சைவ நகராக அறிவிப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தற்போது பாலிதானா நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.