குஜராத்தில் ஒரு "நாயகன்".. ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி.. அரசியல்வாதிகளை அலறவிடும் "தனி ஒருவன்"
காந்திநகர்: குஜராத்தில் ஒரே தொகுதியில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று வாகை சூடிய ஒருவரை பற்றிதான் தற்போது சமூக வலைதளங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன.
இதுவரை எந்த அரசியல் கட்சிகளையும் இவர் தேடிச் சென்றது கிடையாது. கட்சிகள்தான் வரிசைக் கட்டி இவரது வீட்டு வாசலில் காத்து நின்றிருக்கின்றன.
இவரை தோற்கடிக்க கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் செய்யாத தந்திரம் கிடையாது. பண பலம், ஆள் பலம் என எத்தனை அஸ்திரங்களை கையில் எடுத்த போதிலும் இவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை என்பதுதான் இவரது தனிச்சிறப்பே. பணப் பின்னணி, ஜாதி பின்னணி என எதுவும் இல்லாமல் எப்படி இந்த மனிதரால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது. வாருங்கள் பார்க்கலாம்.
நண்பரின் நச்சரிப்பால் வாங்கிய லாட்டரி.. ரூ1.2 கோடி பரிசு.. வாங்கிய முதல் லாட்டரியிலேயே கோடீஸ்வரர்!
யாருக்கும் அடிபணியாதவர்..
குஜராத் மாநிலம் துவாரகா பகுதியைச் சேர்ந்தவர் பிரபுபா மேனக் (60). துவாரகா தொகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார் பிரபுபா மேனக். இந்தியாவில் இருக்கும் பல ஜாம்பவான் அரசியல்வாதிகளால் கூட இவ்வாறு ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றது கிடையாது. அப்படி வெற்றி பெறுவது சாதாரண விஷயமும் அல்ல. பணத்தால் இதை அவர் சாத்தியமாக்கி இருப்பார் என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. ஏனெனில் அவர் பெரிய செல்வந்தரும் கிடையாது. இதுகுறித்து விசாரித்தால், அவரது அரசியல் வெற்றிக்கு முழுக்க முழுக்க அவரது துணிச்சலும், யாருக்கும் அடிபணியாத குணமுமே காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
"நாயகன்" பாணியில்..
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரான பிரபுபா மேனக், சிறு வயது முதலே துணிச்சலுக்கு பெயர் போனவர் எனக் கூறப்படுகிறது. எங்கு யார் தவறு செய்தாலும் அதை தனி ஆளாக தட்டிக் கேட்கும் பழக்கம் இவருக்கு இருந்துள்ளது. இதனால் பல பிரச்சினைகளையும் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால், நியாயத்துக்காக குரல் கொடுப்பதை பிரபுபா மேனக் நிறுத்தவில்லை. இதன் காரணமாகவே, துவாரகா மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மனிதரானார் பிரபுபா. இதனால் இவரது பின்னால் இளைஞர்கள் கூட்டமும் அதிகம் சேர்ந்தது. காலப்போக்கில், பிரபுபா தான் துவாரகாவுக்கு பாதுகாப்பு என்ற சூழல் உருவானது.
பண பலத்தால் தோற்கடிக்க முயற்சி..
இதனிடையே, தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி துவாரகா மக்களுக்கு நன்மை செய்யலாம் என எண்ணிய பிரபுபா, முதன்முதலில் 1990-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாக நின்று அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்எல்ஏ ஆனதும் துவாரகா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிரபுபாவின் பலகட்ட முயற்சியால், குஜராத்தில் உள்ள ஏனைய தொகுதிகளை காட்டிலும் வளர்ச்சி அடைந்த தொகுதியாக துவாரகா மாறியது. இதனால் 1993, 1998 சட்டமன்றத் தேர்தல்களிலும் சுயேச்சையாகவே நின்று வெற்றி பெற்றார். இவரை வீழ்த்த காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ம்ஹும்.. எதுவும் பலிக்கவில்லை. பணத்தை கொடுத்து துவாரகா மக்களை ஈர்க்கவும் முயற்சிகள் நடந்தன. எந்தக் காரணத்துக்காகவும் பிரபுபாவை விட்டுக்கொடுக்க துவாரகா மக்கள் தயாராக இல்லை.
கட்சியில் சேர்க்க போட்டா போட்டி..
அதன் பிறகுதான், அரசியல் கட்சிகள் பிரபுபாவை தேடி வரத் தொடங்கின. ஆனால், எந்த அரசியல் கட்சிகளிலும் சேர பிரபுபா மேனக்குக்கு விருப்பமில்லை. பின்னர் மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு, 2002 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் துவாரகா தொகுதியில் போட்டியிட்டார் பிரபுபா. அந்தத் தேர்தலானது, குஜராத் கலவரத்துக்கு பிறகு நடைபெற்றதால் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அந்த தேர்தலில் சுனாமி அலை போல வாக்குகளை சுருட்டி பாஜக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆனாலும், துவாரகா தொகுதியில் பிரபுபாவை பாஜகவால் தோற்கடிக்க முடியவில்லை.
மக்கள் செல்வாக்கே காரணம்..
இதையடுத்து, பிரபுபாவிடம் கெஞ்சி கூத்தாடி தங்கள் கட்சிக்கு கொண்டு வந்தது பாஜக. அதையடுத்து, 2007, 2012, 2017 என அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பில் துவாரகாவில் நின்று வெற்றி பெற்றார் பிரபுபா மேனக். இவ்வாறு 7 முறை துவாரகா தொகுதியில் வெற்றி பெற்ற பிரபுபா மேனக், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் துவராகாவில் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதுகுறித்து பிரபுபா மேனக் கூறுகையில், "எனது வெற்றிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கம் சம்பந்தமில்லை. சுயேச்சையாக நின்றாலே துவாரகாவில் நான் தான் வெற்றிப் பெறுவேன். மக்களுக்காக மட்டுமே உழைப்பதும், தேர்தலின் போது மாறும் அலைகளை புரிந்துகொள்வதுமே எனது வெற்றிக்கான காரணம்" என்கிறார் துவாரகாவின் நாயகன் பிரபுபா மேனக்.