குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு.. காங். வேட்பாளர் அகமது பட்டேலுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏ
டெல்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் இன்று நடைபெற்றது.
பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அகமது பட்டேலை தோற்கடிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக தெரிவித்ததால் பாஜக தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அளித்த புகாரையடுத்து அவ்விரு எம்எல்ஏக்கள் வாக்குகள் செல்லாது என அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், மற்றொரு திருப்பமாக காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலுக்கு வாக்களித்ததாக பாஜக எம்எல்ஏ நளின் கொட்டாடியா பேட்டியளித்தார். இதனால் அகமது பட்டேலுக்கு வெற்றி வாய்ப்பு கூடியுள்ளது. நளின் கொட்டாடியா சமீபகாலமாக பாஜக தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக அறிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏவோ காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.