குல்பர்க் தீர்ப்பில் திருப்தியில்லை.. உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி மனைவி பேட்டி
காந்திநகர்: குல்பர்க் கலவரம் குறித்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா நிருபர்களிடம் கூறுகையில், தீர்ப்பில் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. நான் எனது போராட்டத்தை தொடருவேன். என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்வேன் என்றார்.
2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டியில் யாரோ சமூக விரோதிகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 59பேர் உயிரோடு உடல் கருகி மாண்டனர்.
இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இந்துக்களும், முஸ்லிம்களும் மோதியதில் 2000 பேர் பலியானார்கள்.
பிப்ரவரி 28ம் தேதி 20000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' பகுதியில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதோடு, அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். கலவரம் நடந்த போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு விசாரணை குழு அறிவித்தது. இந்நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 24 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், 36 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ஈசன் ஜாப்ரி மனைவி ஜாகியா நிருபர்களிடம் கூறியதாவது: தீர்ப்பில் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. நான் எனது போராட்டத்தை தொடருவேன். என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்வேன் என்றார்.