முதல் வேலையாக சோனியா மருமகன் வதேராவின் 'நிலக் கொள்ளை" வழக்கை முதலில் கையிலெடுத்த ஹரியானா பாஜக அரசு!
சண்டிகர்: ஹரியானாவில் முதல்வராக பதவியேற்ற எம்.எல். கட்டார் தலைமையிலான அரசு முதல் வேலையாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை வழக்கை கையில் எடுத்துள்ளது காங்கிரஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவன் ராபர்ட் வதேரா. இவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி விவசாய நிலங்களை மிகக் குறைந்த அளவுக்கு வாங்கிக் குவித்து அதிக விலைக்கு டி.எல்.எப். என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தார் என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலக் கொள்ளையை ஹரியானாவில் அம்பலப்படுத்தியவர் அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஆனால் ஹரியானாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, அசோக் கெம்காவை பல்வேறு துறைகளுக்கு பந்தாடிவிட்டு வதேராவை காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தார். இது காங்கிரஸில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க வதேராவின் நிலக்கொள்ளையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்றது. அக்கட்சியின் எம்.எல். கட்டார் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
பாஜக அரசு அமைந்த உடனேயே முதல் வேலையாக வதேராவின் நிலக்கொள்ளை வழக்கை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹரியானா அமைச்சர் ராம்பிலாஸ் சர்மா, சோனியா காந்தியின் நலனுக்காக மட்டுமே முன்னாள் முதல்வர் ஹூடா செயல்பட்டார். வதேரா மீதான நிலக்கொள்ளை வழக்கை தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்றார்.
அதேபோல் மற்றொரு அமைச்சரான அனில் விஜி கூறுகையில், ஹரியானாவில் அப்பாவி ஏழை விவசாயிகளிடம் இருந்து 70 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால் இந்த நிலம் பெருந்தொகைக்காக பெரும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலக் கொள்ளை வழக்கில் யார் ஈடுபட்டிருந்தாலும் அது வதேராவாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஹூடாவாக இருந்தாலும் சரி.. நிச்சயம் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.