ஹவாலா மூலம் 'இந்திய அரசியல்வாதிகளை' மிரட்டி வளைத்துப் போடும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.
டெல்லி: ஹவாலா மூலமாக பணத்தை வாரியிறைத்து இந்திய அரசியல்வாதிகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மிரட்டி வளைத்துப் போடுவதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2 அத்தியாங்களில் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்தும் கேரளா எப்படி ஹவாலா தலைநகராக உருவெடுத்தது என்பது குறித்தும் பார்த்தோம். இந்த 3வது அத்தியாயத்தில் ஹவாலாவில் சிக்கும் அரசியல்வாதிகள் குறித்து பார்க்கலாம்..
ஒவ்வொரு தேர்தலின் போதும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடுகிறது இந்த ஹவாலா பணப் பரிமாற்றம். கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பெருமளவு ஹவாலா பணம் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது.
ஐ.எஸ்.ஐ.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் பெருமளவிலான ஹவாலா பணப் பரிமாற்றத்தை நேரடியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும். அரசியல்வாதிகளுக்கு பெருமளவு பணத்தை ஹவாலா முறையில் அளித்துவிட்டு அவர்களை மிரட்டி தங்களது திட்டங்களுக்கு உடந்தையாக்கிக் கொள்வதுதான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் நோக்கம்.
ஐ.எஸ்.ஐ. பட்டியலில் அரசியல்வாதிகள்
ஐ.எஸ்.ஐ. பட்டியலில் உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநில அரசியல்வாதிகள் பலரும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் காலத்தில் நாட்டின் இதர பகுதிகளைவிட இந்த மாநிலங்களுக்குத்தான் ஹவாலா பணம் அதிக அளவு அனுப்பி வைக்கப்படுகிறது.
தேர்தல் நிதியாக
தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பல்வேறு ஹவாலா வழிகளில் இந்த பணம் அரசியல்வாதிகளுக்கு சென்றுவிடுகிறது. பின்னர் தேர்தல் பிரசாரத்தின் போது இவை தேர்தல் நிதியாக உருமாறுகிறது.துபாய் சந்தை
இந்த ஹவாலா பணப் பரிமாற்றம் பெரும்பாலும் துபாயில் இருந்துதான் இயக்கப்படுகிறது. ஹவாலா சந்தையில் துபாயை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான்.
மிரட்டி காரியம் சாதிக்கும் ஐ.எஸ்.ஐ.
பொதுவாக அரசியல்வாதிகளுக்கு இந்தப் பின்புலம் தெரிவதில்லை. பணம் கிடைத்துவிடுகிறதே என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்படிப் பணம் பெற்றவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு பின்னர் மிரட்டுவதுதான் ஐ.எஸ்.ஐ. வேலை.
ராவின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.என். சிங் இது குறித்து கூறுகையில், ஐ.எஸ்.ஐ. அமைப்பினால் அரசியல்வாதிகள் மிரட்டப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த அரசியல்தலைவர்கள் பலரும் ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர் இ தொய்பா கட்டுப்பாட்டில் இருக்கும் ஹவாலாவாலாக்களுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்களே.
மும்பை குண்டு வெடிப்பில்..
இப்படி அரசியல்வாதிகளுக்கும் ஹவாலா பணத்துக்குமான தொடர்பை அம்பலப்படுத்தியதே ஜெயின் ஹவாலா வழக்குதான். 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் தலைவர்கள் பெயர்கள் வெளியாகின.
அதிலும் குறிப்பாக 2 முக்கிய அரசியல் தலைவர்கள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிடம் இருந்து தலா ரூ14 கோடியை ஹவாலா மூலம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த 2 முக்கிய தலைவர்களும் மும்பை தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தாவூத் கூட்டாளிகள் இந்தியாவை விட்டு பாதுகாப்பாக வெளியேறிச் செல்வதற்கு உதவியாக இருந்தவர்கள்.
ஜெயின் ஹவாலா வழக்கு
அரசியல்வாதிகளுக்கு ஹவாலா மூலமாக ரூ72 கோடி பணம் வழங்கப்பட்டது என்பதுதான் 1991 ஆம் ஆண்டு ஜெயின் ஹவாலா வழக்கு. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு சோக்சி என்ற ஹவாலாவாலா ரூ72 கோடி பணம் கொடுத்தார். இதன் மூலம்தான் ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கும் அரசியல்வாதிகளுக்குமான தொடர்பும் அம்பலமானது.
இதில் ஜெயின் சகோதரர்களான சுரேந்திரா மற்றும் ஞானேந்திராதான் முதன்மை குற்றவாளிகள். இந்தப் பணப் பரிமாற்றம் முழுவதும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதே.
மகாராஷ்டிராவில் ஒடுக்கப்பட்ட ஹவாலா
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் நிழல் உலக தாதாக்கள் கோலோச்சிய நிலையில் அரசியல்வாதிகள், பாலிவுட் என அனைத்திலும் ஹவாலா பணம் பாய்ந்திருந்தது. மிகக் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஹவாலாவின் பிடியில் இருந்து மகாராஷ்டிரா மெல்ல மெல்ல விலகியது.
கேரளாவுக்கு ஷிப்ட்
இப்போது கேரளாதான், ஹவாலாவின் பிரதான சந்தைத் தளமாக உருமாறிவிட்டது. துபாயுடன் கேரளா நேரடித் தொடர்பில் இருப்பதால் இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெத்திருக்கிறது. இந்தப் பணம் அரசியல்வாதிகளுக்குப் போகிறதா? என்பதை சரியாக கணக்கிட முடியாத சூழல் உருக்கிறது.,
ஹவாலா என்பது தடுக்கக் கூடிய ஒன்றல்ல என்கிறது 'ரா'வின் அறிக்கை ஒன்று. இந்த ஹவாலா நிதித் தீவிரவாதமாகவும் மாறுகிறது. ஹவாலா பணத்தை முன்வைத்து அரசியல்வாதிகள் மிரட்டப்படுவதை ஆராய்ந்த வோரா கமிட்டி அறிக்கை வெளியாகவில்லை. அது பல அரசியல்வாதிகளுக்கு 'வேட்டு' வைக்கும் அறிக்கையாகும்.
ஹவாலா பணத்தில் பெரும்பகுதி ஜம்மு காஷ்மீரத்து பிரிவினைவாதிகளின் கைகளுக்கு போகிறது. குறிப்பாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை ஆதரிப்போர்தான் இந்த ஹவாலா மூலம் பெருமளவு ஆதாயமடைகின்றனர்.
நெருக்கடி..
இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி ஒருவர், அரசியல்வாதிகளிடம் இருந்து தமக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்கிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மொத்தம் 692,328 கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.