நம்ம ஊர் அரிசியில் சீன பிளாஸ்டிக் மிக்ஸிங்கா?... டெல்லி கோர்ட்டில் வழக்கு
டெல்லி: தமிழகத்தில் பிரதான உணவு தானியமாக உள்ள அரிசியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
சமீபகாலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் என்ற பிரச்சினை பூதாகரமாக உருவாகியுள்ளது. அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக ரசாயனம் சேர்க்கப் பட்டிருப்பதாகக் கூறி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தரப்படும் சத்துப் பானங்கள் சிலவற்றிலும் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இன்னும் சில உணவுப் பொருட்களிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "உலக மயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன. ஆனால் தர பரிசோதனை நடத்தப்படுவதில்லை.
அசல் அரிசியுடன் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது. இதை சாப்பிடுகிறபோது, மிக மோசமான இரைப்பை நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அரிசி, பருப்பு, பழ மொத்த வியாபார மண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பழங்கள் கால்சியம் கார்பைடு மற்றும் ரசாயனங்கள் சேர்த்து இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாகவும் தனது புகாரில் சுக்ரீவ துபே குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20-ந் தேதி இந்த வழக்கை தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.