ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் பழங்குடி பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியாவில் மொழிசிறுபான்மையினருக்கு பழங்குடி பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு முதல் முறையாக வழங்குகிறது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் இன்று மோடி மோடி என முழங்குகின்றனர் பொதுமக்கள். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும்; ஜம்மு காஷ்மீர் பற்றி எரியும் என அச்சுறுத்தியவர்களுக்கு தக்க பதிலடிதான் இந்த மோடி- மோடி முழக்கம் என்பது.
3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும்
370-வது பிரிவு நீக்கத்தால் நன்மை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்படாமல் இருந்தால் இடஒதுக்கீடு சாத்தியமாகிவிடுமா? இப்போது 370-வது பிரிவை நீக்கிவிட்டோம். இதனால் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள், பஹாரிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது உரிமைகளைப் பெறக் கூடியதாக இருக்கிறது.
இடஒதுக்கீடு
370-வது பிரிவு நீக்கப்பட்டால் இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமாகி இருக்கிறது. குஜ்ஜார், பகர்வால், பஹாரி சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிபதி ஷர்மா ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. பஹாரி உள்ளிட்ட சமூகங்கள் விரைவில் எஸ்டி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறப் போகின்றனர். இந்த விவகாரத்தில் குளிர்காயவும் சில சக்திகள் முயற்சி செய்தன. ஆனால் மக்கள் இதனை நிராகரித்துவிட்டனர்.
மோடிக்கு நன்றி சொல்லுங்க
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களாகிய நீங்கள் 3 குடும்பங்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். பஞ்சாயத்துகள், மாவட்ட கவுன்சில்களுக்கு 30,000 பேர் சுதந்திரமான தேர்தல் மூலம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மத்திய அரசு இந்த மாநிலத்துக்கு வழங்கிய நிதியை சிலர் மட்டுமே அபகரித்து வந்தனர். இப்போது மக்கள் நலத் திட்டங்களுக்காக மட்டுமே ஒட்டுமொத்த நிதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அடுத்த ஆண்டு தேர்தல்
ஜம்மு காஷ்மீர் மாநிலமான 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதன் பின்னர் இம்மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.