சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள் : அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி: சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், அறிவிப்புகள், தகவல்கள், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் பல வெளிநாட்டு தளங்கள். அவை பின்பற்றும் சட்ட திட்டங்கள் வேறு. எனவே, சமூக வலைத்தளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், ரகசியமாக காக்கப்பட வேண்டிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது. அதிகாரிகள், அரசு நிலைப்பாட்டின்மீது தங்களது கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றெல்லாம் அந்த சுற்றறிக்கையில் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப் பட்ட பிறகு சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மோடி அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தனிநபர் தெரிவிக்கும் கருத்து மற்றவர்களால் பொது வெளியில் விமர்சிக்கப்படுவதால், தங்களது பதிவுகளில் மிகுந்த எச்சரிக்கை வேண்டுமென அறிவுறுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.