செருப்பு ஒன்றே ஆதாரம்.. ஜிஷா கொலையாளியை காஞ்சிபுரத்தில் போலீஸ் கைது செய்தது எப்படி?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவியான ஜிஷா கடந்த ஏப்ரல் 28ம் தேதி வீட்டுக்குள் வைத்து பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் உறுப்பு சேதம் செய்து கொல்லப்பட்டார்.
இந்த கொலையை, கேரளாவின் நிர்பயா என்று டெல்லி மாணவி பலாத்காரம் மற்றும் கொடூர உறுப்பு சேத கொலையுடன் ஒப்பிட்டு சமூக ஊடகங்கள் அழைக்கின்றன.
நாட்டையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக சில தினங்கள் முன்பு காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அமீருல் இஸ்லாம் (23) என்ற அசாமை பூர்வீகமாக கொண்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலையாளியை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு போலீசார் தூக்கியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூடு பிடித்தது
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொலை நடந்தபோதும், சட்டசபை தேர்தலுக்கு பிறகு இடதுசாரி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதும்தான், வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
புது விசாரணை குழு
கொலை வழக்கை விசாரித்த விசாரணை குழுவை மாற்றியது புதிய அரசு. திறமையான போலீஸ் அதிகாரி என்று புகழப்படும், கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது அரசு.
20 லட்சம் போன் அழைப்பு
போலீஸ் குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், விஞ்ஞானரீதியான புலனாய்வை மேற்கொண்டனர். 1,500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கைரேகைகளை ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் பதிவான 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை பரிசீலித்தனர்.
செருப்பு
கொலை வழக்கில் முக்கிய தடயம், ஜிசா கொலையுண்ட அவருடை வீட்டில் கிடந்த ரத்தம் தோய்ந்த செருப்புதானாம். செருப்பிலிருந்த ரத்தக்கறை மற்றும், வீட்டு பூட்டில் காணப்பட்ட ரத்தக்கறை ஆகியவற்றையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்று உறுதி செய்தனர்.
வழிகாட்டிய கடைக்காரர்
கைப்பற்றப்பட்ட செருப்பு, எந்த கடையில் விற்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து, அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், செருப்பை வாங்கியவர் வடமாநில வாலிபர் என்று தெரியவந்தது. அப்போது, ஜிஷா வீட்டுக்கு அருகே கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அசாம் டூ காஞ்சிபுரம்
அமீருல் இஸ்லாமின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலை நடந்த தினத்திற்கு பிறகு, அமீருல் இஸ்லாம், வேலைக்கு வரவில்லை என்றும் அசாமுக்கு சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். அந்த தகவலை பின்தொடர்ந்து சென்ற போலீசாருக்கு, அமீருல் காஞ்சீபுரத்துக்கு வந்து கட்டுமான பணி செய்து வருவது தெரியவந்தது.
வாக்குமூலம்
இதையடுத்து, தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு விரைந்தனர். காஞ்சீபுரம் அருகே சிங்கடிவாக்கத்தில் அமீருல் இஸ்லாமை பிடித்தனர். ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தடயங்களை அழிப்பதற்காக அவரை கொடூரமான முறையில் சிதைத்திருக்கிறார்
டிஎன்ஏ சோதனை
செருப்பில் இருந்த ரத்த மாதிரியும், அமீருல் இஸ்லாமின் ரத்த மாதிரியும் ஒத்துப் போகிறது. எனவே, அமீருல் இஸ்லாம்தான் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழிக்கு பழி
அமீருல் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதை ஜிசா கண்டித்ததாகவும் எனவே கோபத்தில் பழிவாங்க இவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டதாகவும் வாக்குமூலத்தில் குற்றவாளி கூறியுள்ளார்.
தண்டனை உறுதி
சிறப்பு விசாரணை குழு தலைவர் சந்தியா கூறுகையில், "இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வசதியாக, கூடுதல் ஆதாரங்கள் சேகரிப்பதுடன், அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளோம். அதுவரை குற்றவாளியின் படம் ஊடகங்களில் வெளியிடப்பட மாட்டாது" எனத் தெரிவித்தார். கொலையாளியை பிடித்த போலீஸ் படைக்கு முதல்வர் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். அனைத்து கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.