எனது பாரதரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்...: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்
பெங்களூர்: தான் பெற்றுள்ள நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின், தனது விருதை தனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
இது குறித்து நேற்று அவர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிசம் கூறியதாவது :-
நல்ல முன்னேற்றம்...
பல ஆண்டுகளுக்கு பிறகு விஞ்ஞான துறையில் ஒருவரை மத்திய அரசு தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து இருப்பது போற்றுதலுக்கு உரியது. மேலும் தற்போது மற்ற துறைகளை காட்டிலும் விஞ்ஞான துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவது நல்ல முன்னேற்றம் ஆகும்.
3வது இடத்தில் நான்....
இதுவரை விஞ்ஞான துறையில் சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம் ஆகியோருக்கு தான் பாரத ரத்னா விருது கிடைத்து இருந்தது. இப்போது 3-வதாக எனக்கும் அந்த விருது கிடைத்து இருப்பது இன்னும் அதிக சந்தோஷம் அளிக்கிறது.
இளைஞர்களுக்கு....
இந்த விருதை நான் இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தற்போது இளைஞர்கள் டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான படிப்புக்கு பதிலாக, விஞ்ஞான துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அந்த துறையின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகள்.....
விஞ்ஞான துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதை அறிந்து முன்னேறி சென்றால் சாதனை சிகரத்தை தொடுவதில் சந்தேகம் எதுவும் இல்லை. நான் பெற்றுள்ள இந்த விருது இளைய சமுதாயத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
சரியல்ல...
விஞ்ஞான துறையை அரசு புறக்கணிக்கிறது என்று கூறுவது சரியல்ல. மற்ற துறைகளை போலவே விஞ்ஞான துறையின் வளர்ச்சிக்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.