''நான் ஒரு பிற்படுத்தப்பட்டவன்''- திடீரென ஜாதியை கையில் எடுக்கும் நரேந்திர மோடி
அமேதி: நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், எதிர்கட்சிகள் என்னை குறி வைத்து தாக்கி, கீழ்த்தரமான அரசியலை நடத்துகின்றன என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வார்த்தைப் போர்
தேர்தல் பிரசார மேடையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியின் பிரசார பீரங்கி பிரியங்கா இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
தரம்தாழ்ந்த அரசியல்
பிரியங்கா காந்தி நேற்று பிரச்சார கூட்டம் ஒன்றில் மோடியை விமர்சித்து பேசுகையில், நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தில் தனது தந்தையான முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அவமதித்து விட்டதாகவும் அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
நான் பிற்படுத்தப்பட்டவன்:
இதற்கு ட்விட்டர் தளத்தில் நரேந்திர மோடி இன்று கொடுத்துள்ள பதிலில், சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை அவர்கள் தரம் தாழ்ந்த அரசியல் என கூறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கு வங்கி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை குறிவைக்கும் விதமாகவே மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை நாடு, வளர்ச்சி, ஊழல் என்று மட்டுமே பேசி வந்த மோடி முதன்முறையாக ஜாதியைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.