மே.வங்க அரசை எதிர்த்து பேசினால் தலையை துண்டாக்கிடுவாங்க... கோவாவில் பீதியூட்டிய பாஜகவின் பட்னாவிஸ்
பனாஜி: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் தலை, கை, கால்களை துண்டு துண்டாக்கி நடுத்தெருவில் தொங்க விட்டுவிடுவார்கள் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.
கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனாவும் களத்தில் மோதுகின்றன.
கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது. கோவாவில் மிக வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியை அப்படியே பாஜக கபளீகரம் செய்துவிட்டது. எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் வளைக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் என்கின்றன இந்த கருத்து கணிப்புகள்.
மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு- சரத்பவாருடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
மமதா பானர்ஜி பயணம்
அண்மையில் கோவா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் மமதா ஆலோசனை நடத்தி இருந்தார். மமதாவின் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
பட்னாவிஸ் டேரா
இதனிடையே கோவாவில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாஜக நிர்வாகிகளுடன் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். கோவா மாநிலத்துக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார் பட்னாவிஸ். 2 நாட்கள் பயணமாக பனாஜியில் முகாமிட்டுள்ளார் பட்னாவிஸ்.
மே.வங்கத்தில் துண்டிக்கப்படும் தலைகள்
பாஜக தொண்டர்களிடம் பேசிய பட்னாவிஸ், மேற்கு வங்க மாநிலத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் உங்கள் தலையை துண்டித்துவிடுவார்கள். உங்களுடை கை கால்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவார்கள். பொதுமக்களை தெருக்களில் தொங்கவிடுகிறார்கள். அதே பாணி கலாசாரத்தைத்தான் கோவாவில் கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது. திரிணாமுல் காங்கிரஸ் குறித்து கோவா மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சி
மேலும் கோவா மாநிலத்துக்கு என தனி கலாசாரம் உண்டு. கடந்த 10 ஆண்டுகாலம் இம்மாநிலத்தில் பாஜக நிலையான ஆட்சியை தந்து வருகிறது. உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் மீதான பட்னாவிஸின் இந்த கடுமையான விமர்சனத்துக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.