டெல்லி கேந்திரிய பந்தரில் கிலோ ரூ. 120க்கு துவரம் பருப்பு... அலைமோதும் மக்கள்...!
டெல்லி: விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, டெல்லி கேந்திரிய பந்தர் கடைகளில் கிலோ 120 ரூபாய்க்கு துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு தினங்களில் மட்டும் இந்தக் கடைகளில் சுமார் 20 டன் பருப்பு விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சில்லறை விலையில் விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.200ஆக அதிகரித்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். துவரம் பருப்பின் விலையானது, கடந்த வாரத்தில் ரூ.185-ஆகவும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.85-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உளுந்து...
இதேபோல், உளுந்தின் விலையும், சில்லறை விலையில் கிலோவுக்கு ரூ.170-ஆக விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இதன் விலையானது ரூ.98-ஆக இருந்தது.
மக்கள் அவதி...
பருப்பு வகைகளின் விலை உயர்ந்ததால், உணவகங்களிலும் பருப்பு வகை உணவுகளின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
இறக்குமதி...
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
5 ஆயிரம் டன் துவரம் பருப்பு...
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஏற்கனவே 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,000 டன் துவரம் பருப்பையும், 1,000 டன் உளுந்தையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
20 டன் விற்பனை...
இந்நிலையில், டெல்லியில் மட்டும் கடந்த நான்கு தினங்களில் அரசு விற்பனைக் கடைகளான கேந்திரிய பந்தர் மற்றும் சபலில் 200 குவிண்டால், அதாவது 20 டன் துவரம் பருப்பு விற்பனையாகியுள்ளது.
விற்பனை அதிகரிப்பு...
100க்கும் மேற்பட்ட கேந்திரிய பந்தர் மற்றும் 11 சபல் கடைகளில் இவை விற்கப்பட்டுள்ளன. மற்ற சில்லறை விலைக் கடைகளில் துவரம் பருப்பின் விலை கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், அரசு விற்பனைக் கடைகளான கேந்திரிய பந்தர் மற்றும் சபலில் பருப்பு வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.