“புல்டோசர் பாபா.. இந்துக்களின் இதய அரசன்!” மோடி கோட்டையில் யோகி படை - குஜராத்தில் வீசும் உபி வாடை
காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெறும் நோக்கத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வரும், டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
பாஜகவின் இரு பெரும் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் தேர்தல், 2024 லோக் சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.
குஜராத் தேர்தல்.. முஸ்லிம்களுக்கு பாஜக ஏன் சீட் தரல? சட்டென செய்தியாளர் கேள்வி -ஜேபி நட்டா விளக்கம்
மும்முனைப் போட்டி
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதற்காக, 3 கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை பலரும் உற்று நோக்கி வருகின்றனர். இதில் பெரும் வெற்றிபெறுவதற்காக பாஜக முழு மூச்சில் இறங்கி இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என பல தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
உத்தரப்பிரதேச பாஜக
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மொத்த பாஜகவும் குஜராத்திற்கு படையெடுத்து சென்றதை போன்ற உணர்வை தருகிறது அங்கு நிலவும் கள சூழல். பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் எம்பியாக இருப்பது தொடங்கி, ராம ஜென்ம பூமி இயக்கம் வரை உத்தரப்பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் இடையே நீண்ட நெருக்கமான உறவு உள்ளது. இரு மாநிலங்களும் பாஜகவின் கோட்டையாக பார்க்கப்படுகின்றன.
யோகியின் படை
உத்தரப்பிரதேசத்தில் இருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பெரும் கூட்டமே குஜராத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இது வரை இல்லாத அளவுக்கு 160 உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட குஜராத் சென்று இருக்கிறார்கள். யோகி ஆதித்யநாத் தொடங்கி, மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் வரை குஜராத்தில் எங்கு திரும்பினாலும் உத்தரப்பிரதேச வாடை அடிக்கிறது.
யோகி ஆதித்யநாத் பிரச்சாரம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மோர்பி மாவட்டம் வாங்கநெர் அருகே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். புல்டோசர்களின் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்களில் யோகியின் படத்தை போட்டு இந்துக்களின் இதய அரசன் யோகி ஆதித்யநாத் என போற்றப்பட்டு இருக்கிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அவரை புல்டோசர் பாபா என்று முழக்கமிட்டனர்.
புல்டோசர் மாடல்
உபி மாடலில் பிரச்சாரம் செய்து வரும் யோகி ஆதித்யநாத், குஜராத் மாடலை ஆதரித்து பேசி வருகிறார். அப்போது உத்தரப்பிரதேசத்தைபோல் பொது சொத்துக்கள் மீட்கப்படும் என்றும் மக்களிடையே வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தொகுதிகளில் கடந்த முறை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.