கை விரலில் "மை" வைப்பது வெறும் கண் துடைப்பு வேலை தான்... வங்கி ஊழியர் சம்மேளனம் !
வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கை விரலில் மை வைப்பது வெறும் கண் துடைப்பு வேலை தான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா: வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் வகையில் பணம் எடுப்பவர்களின் கை விரல்களில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கியில் ஒருவரே அதிகளவில் பணம் மாற்றி வருவதால் மற்றவர்கள் பணம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரே நபர் திரும்ப திரும்ப பணம் எடுக்க வருவதை தடுக்க நோக்கில் வங்கிகளில் பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான மை மைசூரில் இருந்து வரவழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மை இன்னும் பல வங்கிகளுக்கு வந்து சேரவில்லை என வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. பெரும்பாலான வங்கிகளில் புதன்கிழமை இரவு வரை அந்த மை பெறப்படவில்லை.
இன்று கூட வங்கிகளுக்கு திருப்திகரமான அளவில் மை வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையமும் அந்த வகை அழியாத மையை வழங்க மறுத்து விட்டது. எனவே வேறு வழி இல்லாமல், எளிதில் அழிகின்ற மை வகையைதான் வங்கிகள் தற்போது பயன்படுத்துகின்றன. உயர் மட்டத்தில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் மையை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.