நாடு முழுவதும் 65வது குடியரசு தினக் கொண்டாட்டம்.. பலத்த பாதுகாப்புடன்!
டெல்லி: நாடு முழுவதும் 65வது குடியரசு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் குடியரசு தினத்தை அரசுத் தரப்பிலும், பொதுமக்களும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 20,00 போலீஸாரும், ஆயுதப் படையினரும் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
டெல்லி முழுவதும் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு குடியரசு தின அணிவகுப்பும் நடந்ததால் இந்தக் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ கலந்து கொண்டார்.
அணிவகுப்பு நடந்த ராஜ்பாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குள்ள 125 கட்டடங்களும் சீல் வைக்கப்பட்டிருந்தன. மேலம் அந்தக் கட்டடங்களின் மேலிருந்தபடி பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்ட குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. தேசியக் கொடியேற்றி, அலங்கார ரத ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடந்தன. பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன.