கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா?... சுவாரஸ்ய சர்வே முடிவு!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்ற சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பெங்களூரு : கர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவிற்கு அதிக அளவில் இருப்பதாக இந்தியா டுடே கார்வி கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியாக அடுத்த மாதம் இந்நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்திருக்கும். மே 12ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும் அதனைத் தொடர்ந்து மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே கார்வி சேர்ந்து நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 10 சதவீதம் மக்கள் மிகச் சிறப்பான செயல்பாடு என்றும், 38 சதவீதத்தினர் நல்ல செயல்பாடு என்றும், 31 சதவீத மக்கள் சராசரி செயல்பாடு என்றும் தெரிவித்துள்ளார். 9 சதவீதம் மக்கள் மிக மோசமான செயல்பாடு என்றும் 2 சதவீத மக்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவிற்கே பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது. 33 சதவீத மக்கள் சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் மூத்தத் தலைவர் எடியூரப்பாவிற்கு 21 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக 21 சதவீதம் மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.