அதிமுக- 116, திமுக- 101 தொகுதிகளில் வெல்லும்- யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: இந்தியா டிவி சர்வே
டெல்லி: தமிழகத்தில் மே -16 ம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என இந்தியா டிவி, சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்புள்ள நிலவரப்படி, புதுவை தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
அதிமுக தனிப்பெரும் கட்சி
அந்த கருத்து கணிப்பில் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுகதான் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றபோதிலும், கூட்டணி உருவாகாத இந்த சூழ்நிலையில், தனிப்பெரும்பான்மை பலத்தோடு அது ஆட்சியமைக்க முடியாது என்கிறது அந்த கருத்துக் கணிப்பு.
பெரும்பான்மை இல்லை
அந்த கருத்துக் கணிப்புப்படி, ஆளும் அதிமுக 116 இடங்களில் வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
வாக்கு சதவீதம்
கடந்த முறை 51.9 சதவீத வாக்குகள் பெற்ற அதிமுகவின் வாக்கு சதவிகிதம் வரும் தேர்தலில் 41.1ஆக குறையும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஏற்றம்
கடந்த முறை, 31 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, இந்த தேர்தலில் 101 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் வாக்கு சதவிகிதம் 39.5 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி
பாஜக கூட்டணி கட்சிகள் 17 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜகவுக்கு 2.2 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தொங்கு சட்டசபை
இந்த கருத்துக்கணிப்புப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சரி பாதிக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க எந்த கட்சியாலும் முடியாது என்று தெரிகிறது. கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி அரசு
தொங்கு சட்டசபை அமைந்தால், அப்போது மக்கள் நல கூட்டணி போன்ற பல கட்சியினருக்கு கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம். தேர்தல் நெருங்கும்போது டிரெண்ட் மாறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மம்தா ஆதிக்கம்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 156 இடங்களில் மம்தா பனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 114 இடங்களை கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்திக்க உள்ளதாம்.
காங்கிரசுக்கு தோல்வி
கேரளாவில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வியை தழுவும் என கூறியுள்ள கருத்துக் கணிப்பு, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 89 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
அசாமிலும் தொங்கு சட்டசபை
அசாமிலும் தொங்கு சட்டசபையே அமையும் என கூறியுள்ள கருத்துக் கணிப்பு, இங்கு பாரதிய ஜனதா தலைமையிலான அணி 57 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
வலுவான கூட்டணி
அசாம் கணபரிஷத், பாரதிய ஜனதாக கூட்டணி ஏற்படுவதற்கு முன் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக சி வோட்டர் கூறியுள்ளது. எனவே தற்போது அசாமில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
கூட்டணி கணக்கு
இந்த கருத்துக்கணிப்பு தமிழக கட்சிகளின் பழைய கூட்டணிகளை மனதில் வைத்து குறித்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது கூட்டணி கட்சிகள் சிதறிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்தங்கும் அதிமுக
சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில், அதிமுகவைவிட திமுக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என முதல்வர் ஜெயலலிதாவும் பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த கணிப்பில், அதிமுகவுடன் தோளோடு, தோள் உரசும் அளவுக்கு திமுக முன்னேறியுள்ளது தெரியவருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனிப்பெரும்பான்மை பலம் பெற வாய்ப்பிருப்பதை இக்கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.