செவ்வாய் கிரகத்திலும் பூமியிலும் ஒரே நேரத்தில் 'இந்தியா- அமெரிக்கா சந்திப்பு'!
வாஷிங்டன்/டெல்லி: செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் அமெரிக்காவின் மேவன் விண்கலம் நுழைந்துள்ள நிலையில் இந்தியாவின் மங்கள்யானும் நாளை செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைகிறது. அதேபோல் பூமியிலும் நாளை மறுநாள் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி அந்நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்காவின் நாசா அனுப்பிய மேவன் விண்கலம் 10 மாத பயணத்துக்குப் பின்னர் நேற்று முன் தினம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளது.
இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளது. நாளை அதன் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைய இருக்கிறது.
இந்தியா-அமெரிக்கா தலைவர்கள்
இப்படி வானில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்கலங்கள் சந்தித்துக் கொள்ளும் அதே கால கட்டத்தில் பூமியிலும் இந்தியா- அமெரிக்கா தலைவர்கள் சந்திக்க இருக்கின்றனர்.
ஐ.நா. பொதுக்கூட்டத்தில்..
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்கா அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார்.
மோடி உரை
குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரை பாதிக்கும் வகையிலான அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறைகள் குறித்து ஒபாமாவுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். மேலும் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதற்காக நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் தயாராகி வருகிறது.
செவ்வாய் ஆராய்ச்சி
மேலும் அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது,
அபூர்வ நிகழ்வு
வானில் அமெரிக்கா- இந்தியாவின் விண்கலங்கள் ஒரு சேர சந்திக்க.. பூமியில் இந்தியா- அமெரிக்கா தலைவர்கள் சந்திப்பது அபூர்வ நிகழ்வாக சுட்டிக் காட்டி பெருமிதப்படுகின்றனர் மோடி ஆதரவாளர்கள்.