2 அதிநவீன எல் 70 பீரங்கிகளை ராணுவத்திடம் அளித்த பி.இ.எல்.
சென்னை: சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன கிளையில் தயாரிக்கப்பட்ட இரண்டு எல் 70 ரக பீரங்கிகள் ராணுவத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிந்த வரை உள்நாட்டிலேயே ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்க முடிவு செய்தது. இந்நிலையில் எல் 70 ரக பீரங்கிகளை செய்து கொடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டது.
ரூ.575 கோடிக்கான பீரங்கிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிற்கு கிடைத்துள்ளது. எல் 70 மேம்படுத்தப்பட்ட பீரங்கிகள் இரண்டை அந்நிறுவனம் தயாரித்து ராணுவத்திடம் அளித்துள்ளது.
ராணுவம் தெரிவித்த 9 மாதத்திற்குள் பீரங்கிகள் தயாரித்து கொடுக்கப்பட்டதாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டுடன் சேர்ந்து அடுத்த 3 ஆண்டுகளில் 200 மேம்படுத்தப்பட்ட பீரங்கிகளை ராணுவத்திற்கு அளிக்க உள்ளது.
இது குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,
எல் 70 மேம்படுத்தப்பட்ட பீரங்கி அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆனது. வீடியோ டிராக்கிங், எலக்ட்ரோ ஆப்டிகல் பையர் கன்ட்ரோல் சிஸ்டம் என்று உலக அளவில் சில நிறுவனங்கள் மட்டுமே அளிக்கும் வசதி இந்த பீரங்கிகளில் உள்ளது என்றார்.