மீண்டும் சிக்கிய ஷாருக்கான்... யு.எஸ். விமான நிலையங்களில் இந்தியர்களுக்கு தொடரும் 'அவமரியாதை'
டெல்லி: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் இந்திய அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட விஐபிகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், விமானத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தலைவர்களும் சோதனை என்ற பெயரில் அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய அரசியல் தலைவர்களையே விட்டு வைக்காத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், மலையாள நடிகர் மம்மூட்டி, தமிழ் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்களையும் சோதனை என்ற பெயரில் அவமரியாதை செய்து வருகின்றனர். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரண்டாவது முறையாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், 2002 ஆம் அமெரிக்காவிற்கு அரசுப் பயணமாக சென்ற போதும், 2003 ஆம் ஆண்டு பிரேசில் செல்லும் வழியில் டல்லஸ் விமான நிலையத்தில் இறங்கிய போதும் கடும் சோதனைக்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் ஆளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார்.
பிரபுல் பட்டேல்
இந்திய விமானத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல், கனடாவில் நடைபெற்ற சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய கூட்டத்தில் இந்திய அரசு சார்பில் கலந்து கொள்ள செல்லும் போது, அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியின் பெயருடன் பிரபுல் பட்டேலின் பெயர் ஒத்திருப்பதால் மத்திய அமைச்சர் என்றும் பாராமல் அவர் விசாரிக்கப்பட்டார்.
இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் பிரபுல் பட்டேலிடம் பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
அப்துல் கலாம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்தியா திரும்ப ஜான்கென்னடி விமான நிலையத்திற்கு வந்த அப்துல் கலாமை அவர் அணிந்திருந்த கோர்ட்டு மற்றும் ஷு ஆகியவற்றை கழட்டச் சொல்லி அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இழிவாக நடத்தியுள்ளனர். இதே போல் அமெரிக்க செல்லவிருந்த அப்துல் கலாமை டெல்லியில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் ஏற்கனவே அவமரியாதை செய்திருந்தனர்.
மம்மூட்டி
மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் மம்முட்டி தனது நண்பர் நியூயார்க் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய நியூயார்க் சென்றார். அப்போது ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் இறங்கிய மம்மூட்டியை பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்ததோடு, தனி சிறையில் அடைத்தனர். என்ன காரணத்திற்காக அவர் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார் என்ற காரணம் கூட தெரியாமல் வைக்கப்பட்டிருந்த நடிகர் மம்ம்மூட்டியை, இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தனர்.
முகம்மது இஸ்மாயில் என்ற பெயரில் யார் வந்தாலும் அவரை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மம்மூட்டியின் பாஸ்போர்ட்டில் முகமதுகுட்டி இஸ்மாயில் என பெயர் இருந்ததால் அவரை சோதனை செய்தோம் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் காரணம் கூறினர்.
கமல்
மம்மூட்டி போன்றே தமிழ் நடிகர் கமலஹாசனும் ஹாசன் என்று முஸ்லிம் பெயர் போன்று இருப்பதால் அமெரிக்க விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார்.
ஷாருக்கான்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க விமான நிலையத்தில் அவர் அவமானப்படுத்தப்படுவது இது 2-வது முறையாகும். கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் இருந்து யாலே பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்ற போது சுமார் 2 மணி நேரம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையங்களில் இதுபோன்று நடந்து கொள்வதும் பின்னர் மன்னிப்பு கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது ஷாருக்கான் 2-வது முறையாக அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து செல்லும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட விஐபிக்களுக்கு "சோதனை" அவமானங்கள் இனி நடக்காமல் இருக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுதான் முயற்சிக்க வேண்டும்!