மாவோயிஸ்டுகள் கண்ணிவெடியில் காயமடைந்த சிஆர்பிஎப் மோப்ப நாய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை!
மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் படுகாயமடைந்த சிஆர்பிஎப் மோப்ப நாய்க்கு சென்னையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ராயகடா: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஒடிஷா-ஆந்திரா எல்லையில் மல்காங்கிரி மாவட்டத்தில் ஆந்திரா போலீசார் நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஒடிஷாவில் முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்துவதற்காக கண்ணிவெடிகளை ஆங்காங்கே மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்தனர். இப்ப கண்ணிவெடிகளை கண்டறிய மோப்ப நாய்களை சிஆர்பிஎப் படையினர் பயன்படுத்தினர்.
ராயகடா வனப்பகுதியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்றை 5 வயதான எக்ஸெல் என்ற பெல்ஜியன் ஷெப்பர்டு மோப்ப நாய் கண்டுபிடித்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிவெடி வெடித்தது.
இதில் மோப்ப நாயின் வலது கண், வலது காது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மோப்ப நாய் சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1903-ம் ஆண்டு சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனை உருவாக்கப்பட்டது. தற்போதுதான் முதன் முதலாக கண்ணிவெடியில் சிக்கிய படுகாயமடைந்த நாய்க்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.