மோடியின் பேச்சால் இம்பிரஸ் ஆன கல்வியாளர் சுத்தமான இந்தியா திட்டத்திற்கு ரூ.5 கோடி நன்கொடை
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த கல்வியாளரும், சமூக ஆர்வலருமான டாக்டர் மோகன் மாங்னானி பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்திற்காக ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
பெங்களூரில் நியூ ஹாரிசன் பொறியியல் கல்லூரி உள்பட பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது நியூ ஹாரிசன் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை. நியூ ஹாரிசன் கல்வி நிலையங்களின் தலைவரான டாக்டர் மோகன் மாங்னானி பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்திற்காக ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் மோடியை நேரில் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை அளித்தார்.
இது குறித்து அவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
மோடியின் தன்னடக்கம் என்னை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் சுத்தமான இந்தியா திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று மோடி ஆற்றிய உரை எனக்கு பிடித்திருந்தது. அந்த உரையை கேட்ட பிறகே சுத்தமான இந்தியா திட்டத்திற்கு உதவி செய்வது என்று எங்கள் அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக ஆலோசனை கேட்டு நாங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினோம். அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தில் நாங்களும் பங்கேற்றுள்ளோம் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்று மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ ஹாரிசன் கல்வி நிலையங்களின் எக்சிகியூட்டிவ் டைரக்டர் ரேணுகா மாங்னானி கூறுகையில்,
சுத்தமான இந்தியா திட்டத்தில் ஏராளமானோர் சேர வேண்டும் என்று மோடி விரும்புகிறார். சுத்தமான இந்தியா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் எங்களை கேட்டுக் கொண்டார் என்றார்.
நியூ ஹாரிசன் பொறியியல் கல்லூரியில் உள்ள ஒரு பிளாக்கிற்கு மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பலியான ராணுவ வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நியூ ஹாரிசன் குழுமத்தின் கீழ் உள்ள கல்வி நிலையங்களில் இருக்கும் சுமார் 10 பிளாக்குகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
நியூ ஹாரிசன் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் கல்வி மற்றும் சமூக சேவையை பாராட்டி கடந்த 2012ம் ஆண்டு கர்நாடக அரசு ராஜ்யோத்சவா விருது வழங்கியது.