"மவுன விரதம்' இருப்பதால் ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா ஆஜராகமாட்டார்?
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராவதிலிருந்து தப்ப மவுன விரதத்தை கேடயமாக சசிகலா பயன்படுத்துவதாக தெரிகிறது.
பெங்களூர்: ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராவதிலிருந்து தப்ப மவுன விரதம் இருந்து வரும் சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கிய இந்த விசாரணையில் திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன் உள்ளிட்டோர் விசாரணையில் தங்களை இணைத்து கொள்ளும்படி பிரமாண பத்திரத்தில் கோரியதன் பேரில் அவர்களும் ஆஜராகி விளக்கமளித்தனர்.
மருத்துவர்களுக்கு சம்மன்
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அதன் பிரதியும் ஆறுமுகசாமி கமிஷனில் ஒப்படைக்கப்பட்டது.
புகழேந்திக்கும் சம்மன்
இந்நிலையில் தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் கிருஷ்ணப்பிரியா இன்று ஆஜராகி விளக்கமளித்தார். அதுபோல் தினகரன், பூங்குன்றன் ஆகியோரும் ஆஜராகவுள்ளனர்.
மெயிலில் சம்மன்
இதனிடையே ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் இறப்பு வரை சசிகலா மட்டுமே அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 15 நாட்களுக்குள் ஆறுமுகசாமி கமிஷனிடம் சசிகலா விளக்கம் அளிக்க சிறைத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சசிகலா சம்மன் நேரில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சிறைத் துறையில் கூறியுள்ளார்.
சசி மவுனவிரதம்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த போது அவர் ஜெயலலிதாவின் நினைவு நாள் முதல் மவுன விரதம் இருந்து வருவதாக தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனுக்கு அச்சப்பட்டே இதுபோல் மவுன விரதத்தை சசி கடைப்பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
வழக்கறிஞர் ஆஜர்
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மனுக்கு பதிலளிக்க சசிகலா ஆஜராக போவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி ஆஜராகி விளக்கம் தர உள்ளார். சசிகலா மவுன விரதம் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக உள்ளார். இந்த மவுன விரதம் ஸ்டென்ட் முழுக்க முழுக்க விசாரணை கமிஷனுக்காகவே என்று கூறப்படுகிறது.