ஐபிஎல் அணியில் இடம் கிடைக்க பெண்களை 'ஏற்பாடு' செய்ய வேண்டுமா? கிரிக்கெட் வீரர் பரபர குற்றச்சாட்டு
அணியில் விளையாட பெண்கள் ஏற்பாடு செய்யக் கேட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Recommended Video
லக்னோ: உத்தரப் பிரதேச கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, மீண்டும் மாநில அணியில் விளையாட வேண்டுமானால், பாலுறவுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் முஹமது அக்ரம் சைஃபி மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் முஹமது அக்ரம் சைஃபி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், இவர் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளராக உள்ளார். இவர் பிசிசிஐயில் சம்பளம் பெறும் பணியாளராக இருக்கிறார்.
இந்நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைஃபி கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ராகுல் சர்மாவிடம் முஹமது அக்ரம் சைஃபி பணம் மற்றும் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய கேட்டதாக தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக, ஒரு இந்தி சேனல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்குள்ள முஹமது அக்ரம் சைஃபி உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் கேட்கிறார். மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பெண்களை அனுப்பு என கேட்கிறார். மற்றொரு ஆடியோவில் சில போட்டிகளுக்குப் பிறகு மாநில அணியில் ராகுல் சர்மா இடம் பெறுவார் என்று உறுதியளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆடியோ பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்துள்ள முஹமது அக்ரம் சைஃபி, தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்துள்ளார். முஹமது அக்ரம் சைஃபி கூறுகையில், "எனக்கு பெண்ணை அனுப்பியதாக அந்த பையன் சொல்கிறான். இந்த குற்றச்சாட்டு உண்மையானால் அவன் கிரிக்கெட் விளையாடலாமா? இது சரியா? இதை அவன் செய்தானா? இல்லை. அவன் உத்தரப் பிரதேசத்துக்காக விளையாடியிருந்தால் இது நிரூபிக்கப்பட்டிருக்கும். அவன் இதுவரை எந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "விரைவில் உண்மை வெளிவரும். நான் ராஜீவ் சுக்லா போன்ற பெரிய மனிதர்களுடன் வேலை செய்கிறேன். அதனால், எல்லா மூலைகளிலிருந்தும் என் மீது பலர் தாக்குதல் நடத்துவது இயல்பு. இது எனக்கு நெருக்கமானவர்கள் உள்பட அதிருப்தியடைந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்று இருந்தாலும் இது ஏன் 2018 ஆம் ஆண்டு வெளியே வந்துள்ளது?" என்று முஹமது அக்ரம் சைஃபி கேள்வி எழுப்பியுள்ளார்.