ஆர்.சி.பி. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் மல்லையா... ஆனால் "மென்டார்" அவர்தான்!
டெல்லி: ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினாலும் கூட அணியின் தலைமை ஆலோசகராக மல்லையா தொடர்வார் என்று பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் அணியை நிர்வாகித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் விளையாட்டு பிரைவைட் லிமிட்டெட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்து வந்தார் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.
இமெயில் மூலம்
ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு மார்ச் 7ம் தேதி இ மெயில் மூலம் இந்தத் தகவலை பெங்களர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அணி நிர்வாகி ருஸ்ஸல் ஆடம்ஸ் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
நாட்டை விட்டு ஓடிய பிறகு
மல்லையா நாட்டை விட்டு ஓடிய ஐந்து நாட்கள் கழித்து இந்த இமெயில் தகவல் கிரிக்கெட் வாரியத்திற்குப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2ம் தேதி மல்லையா இந்தியாவை விட்டுக் கிளம்பிச் சென்றார்.
ருஸ்ஸல் ஆடம்ஸ் வசம்
தற்போது அணி நிர்வாகத்தை ருஸ்ஸல் ஆடம்ஸ் நிர்வகிக்கவுள்ளாராம். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கூட்டங்களில் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கலந்து கொள்வாராம்.
ஓனர் அவர்தான்
மல்லைய இயக்குநர் பதவியிலி்ருந்து விலகினாலும் கூட நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்பான விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதை பிசிசிஐயும் உறுதி செய்துள்ளது.
டியாஜியோதான் ஒரிஜினல் பாஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை நிர்வகித்து வருவது யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமாகும். இதை ஏற்கனவே இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் மல்லையா விற்று விட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே டியாஜியோவின் கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் அணி வந்துள்ளது.
2008ம் ஆண்டு முதல்
2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மல்லையா விலைக்கு வாங்கினார். முதல் தொடர் முதல் அந்த அணியை அவர் நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.