கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது- மத்திய அரசு தகவல்
டெல்லி: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகின்றனர். ஈராக்கின் மொசூல், திக்ரீத், ஜாதியா, ஜலாலா, தல் அபார் நகரங்களை கைப்பற்றிய கையோடு தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ஈராக்கின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பைஜியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றிவிட்டது. மேலும் ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான கர்பாலாவை தீவிரவாதிகள் தாக்கி அழிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மொசூல் நகரில் தாரிக் நூர் அல்ஹூதா கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் 40 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
40 இந்தியர்கள் கடத்தப்பட்டு 10 நாட்களாகியும் முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த 40 பேரில் 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
இதனிடையே டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நேற்று கூறியதாவது:
கடத்தப்பட்ட 40 இந்தியத் தொழிலாளர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் கூடி இருமுறை ஆலோசனை நடத்தியது.
மொசூலில் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல்களை வெளிப்படுத்த முடியாது. ஈராக்கில் சிக்கித்தவித்து வருகிற இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications