அரபி மொழி தெரியாத இந்தியர்களை சுட்டுக் கொல்கின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?
டெல்லி: ஈராக்கில் அரபி மொழி தெரியாத இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கின் பல முக்கிய நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.
அரபி மொழியில்..
இப்படி சிக்கியிருக்கும் இந்தியர்களிடம் தீவிரவாதிகள் அரபி மொழி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அரபி மொழியை புரிந்து கொள்ள முடியாத, அவர்கள் சொல்லும் அரபி வார்த்தைக்கு அர்த்தம் சொல்லத் தெரியாத இந்தியர்களை சுட்டுவிடுவதாக கூறப்படுகிறது.
உயிர் தப்பிய பஞ்சாப்வாசி
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள துஜைல் என்ற நகரில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமது உறவினர்களிடம் இந்த தகவலை போன் மூலம் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய தாம் பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது தீவிரவாதிகள் தம்மிடம் சில அரபி வார்த்தைகளைக் கூறி அதற்கு அர்த்தம் கேட்டனர். தமக்கு அர்த்தம் கூற தெரியாததால் ஓடும் பேருந்தில் சுடப்பட்ட நிலையில் கீழே தள்ளிவிடப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.
தப்பி சிகிச்சை
பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தாம் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அத்துடன் தீவிரவாதிகளின் துணிகளை துவைப்பது, காலணிகளை துடைப்பது போன்ற வேலைகளிலும் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
பதற்றம்
இத்தகைய தகவல்களால் ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் உறவினர்கள் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.