2014ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானிகள்: இஸ்ரோ ராதாகிருஷ்ணன் முதலிடம்
டெல்லி: இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் தலைசிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
நேச்சர் என்ற பிரபல இதழ் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பதால் ராதாகிருஷ்ணன் இந்த இடத்தைப் பிடித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
மிக உயர்ந்த அறிவியல் ஆய்வு இதழாக கருதப்படும் நேச்சர், இதுவரை வெளியிட்ட பட்டியலில் இந்திய விஞ்ஞானி ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விஞ்ஞானி ஆண்ட்ரியா அக்காமாஜோ இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த கே.ராதாகிருஷ்ணன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். இதையடுத்து காரக்பூரில் உள்ள ஐஐடியில் டாக்டர் பட்டம் பெற்றார்.
1973-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன், நிலவில் நீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்து உலகையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்துள்ள சந்திரயான்-1 விண்கலம் உள்பட இந்தியாவின் முக்கியமான விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர்.
பிராந்திய தொலையுணர்வு அமைப்பின் இயக்குநர், மத்திய பொருளாதார மற்றும் பட்ஜெட் ஆய்வு இயக்குநர், சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தின் இயக்குநர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளையும் ராதாகிருஷ்ணன் வகித்துள்ளார்.
கடந்த 2009 ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார் என்பமு குறிப்பிடத்தக்கது.