ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாவது.. "இனப்படுகொலைக்குச் சமம்".. அலகாபாத் ஹைகோர்ட் சாட்டையடி!
அலகாபாத் : ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமமானது என்று அலகாபாத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் இறப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா வந்து உடல் மோசமாகி இறப்பவர்களை விட, கொரோனாவிற்கு சரியான மருத்துவம் கிடைக்காமல் இறப்பவர்களே இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறார்கள்.
முக்கியமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியை மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள்.. எதிர்க்கட்சியாக நிலைபெறுவோம்.. சீமான்
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசம், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் மக்கள், போதுமான பொது சுகாதார வசதி இன்றி, ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள், முறையாக சிகிச்சை பெற முடியாமல் இறப்பது இனப்படுகொலைக்கு சமமானது, என்று அலகாபாத் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
வழக்கு
உத்தர பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள், சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோரின் அமர்வு இந்த பொது நல வழக்குகள் விசாரணையில் உத்தர பிரதேச அரசை விமர்சனம் செய்துள்ளது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த செய்திகளை படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
வலி
மிகுந்த வேதனையில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கிறோம். மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது கிரிமினல் குற்றம், அது ஒரு இன படுகொலைக்கு சமமான குற்றம். மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு எதிராக இதில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆக்சிஜன்
மக்கள் சாலையில் நின்று ஆக்சிஜனுக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மக்கள் கையேந்தி நிற்கிறார்கள். மக்களை எப்படி உங்களால் இப்படி சாகவிட முடிகிறது. அறிவியல் முன்னேறிவிட்டது. இப்படிப்பட்ட காலத்தில் மக்களை அரசு நிர்வாகம் இப்படி அலைக்கழிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆக்சிஜன் அளவு மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பதாக அரசு ஒரு பக்கம் கூறுகிறது, ஆனால் செய்திகளில், சமூக வலைத்தளங்களில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.
விசாரணை
பொதுவாக சமூக வலைத்தளங்களில் வரும் விஷயங்களை வைத்து நீதிமன்றம் இப்படி உத்தரவுகளை போடாது. ஆனால் நாங்கள் இன்று அந்த கட்டாயத்திற்கு சென்று இருக்கிறோம். அதோடு இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை உறுதி செய்துள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு எதிராக உடனே மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கையை துரித படுத்த வேண்டும்.
உத்தரவு
இந்த விவகாரத்தில் மீரட், லக்னோ மாவட்ட நிர்வாகங்கள் 48 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும் என்று அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மீரட்டில் உள்ள மீரட் மருத்துவ கல்லூரி, லக்னோவில் உள்ள சன் மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்ததாக செய்திகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியான நிலையில், அலகாபாத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.