மோடி விவகாரத்தில் பாஜக பதிலடி: நேரு, முலாயம், ராகுல் பற்றிய பரப்பு போஸ்டர் ரிலீஸ்!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமாகிவிட்டது... மனைவி பெயர் ஜோஷோடபென் என்று வேட்புமனுவில் கூறிய விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் போஸ்டர் அடித்து வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கி வைத்திருக்கிறது.
வதோதரா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த மோடி தமது திருமண வாழ்க்கையை பதிவு செய்திருந்தார். இத்தனை நாள் மோடி இதனை ஏன் மறைத்தார் என்று எதிர்க்கட்சிகள் பிடிபிடித்துக் கொண்டன.
இதற்கு பதிலடி தரும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் களமிறங்கிவிட்டது. மோடி போட்டியிடும் வாரணாசி தேர்தல் அலுவலகம் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தின் மவுன்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவும் ஜவஹர்லால் நேருவும் நெருக்கமாக மகிழ்ச்சியாக இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் அசாமில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் முத்தமிடும் காட்சியும் மத்திய அமைச்சர் சசிதரூரும் அவரது மறைந்த மனைவி சுனானந்தாவும் பொது இடத்தில் நெருக்கமாக இருக்கிற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
மேலும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் படத்தைப் போட்டு அவருக்கு 2 மனைவிகள் என்றும் மோடியை காட்டமாக விமர்சித்து வரும் சமாஜ்வாடியின் மூத்த தலைவரும் உ.பி. அமைச்சருமான ஆசாம் கானுக்கு 6 மனைவிகள் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரிய அளவிலான மோடி படத்தைப் போட்டு' நாட்டுக்காக குடும்பத்தையே தியாகம் செய்தவர் என்றும் அந்த போஸ்டரில் போடப்பட்டிருக்கிறது.
ராகுலுக்கு பதில்
இதனிடையே டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி முதலில் மோடியின் வேட்புமனுவை ஒழுங்காக படிக்க வேண்டும். மோடி ஒன்றும் பொய் சொல்லவில்லை. உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார். சரியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்று பதில் கொடுத்துள்ளார்.