ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம்- இணையசேவை முடக்கம், 144 தடை உத்தரவு!
சண்டிகர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஹரியானாவில் ஜாட் இனத்தினர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஜாட் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மாநில சட்டசபையில் புதிய சட்டம் ஒன்றை அரசு இயற்றியது. ஆனால் இந்த சட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜாட் இனத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதை முன்வைத்து நேற்று மாநிலம் முழுவதும் ஜாட் சமூகத்தினரின் போராட்டம் தொடங்கியது. ஜாட் இனத்தினரின் இந்த போராட்ட அழைப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இப் போராட்டம் தொடர்பாக வதந்திகளை தடுக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், செல்போன் எஸ்.எம்.எஸ். சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ஜாட் இனத்தினர் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளதால் ஹரியானாவில் பெரும்பாலான பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications