சசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையோடு கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக சசிகலா,இளவரசி சுதாகரனுக்கு 120 பிரிவின் கீழ் 6 மாதம் சிறைதண்டனை விதித்தார் நீதிபதி குன்ஹா.
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கூட்டுச்சதி என்பதை நீக்க கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மனுத் தாக்கல் செய்திருந்தனர். இறுதி தீர்ப்பின் போது கூட்டுச்சதி பற்றி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்திருந்தார்.
4 ஆண்டுகள் தண்டனை
18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்த நீதிபதி டி.குன்ஹா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கூட்டுச்சதி தண்டனை
கூட்டுச்சதி குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. கூட்டுச்சதி குற்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.