கர்நாடகாவுக்கு ஏன் வீண் பிரச்சினை? ஜெயலலிதாவை சென்னை சிறைக்கு மாற்றுங்கள்-மாஜி பிரதமர் தேவகவுடா
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று தேவகவுடா அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் பெங்களூரில் தேவையில்லாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா பாதுகாப்புக்காகவும், அவரை பார்க்க வரும் தொண்டர்கள் போராட்டத்தை தடுக்கவும் கர்நாடக போலீஸ் படை பயன்படுத்தப்படுகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, இந்த வழக்கு அவர் ஆளும் மாநிலத்தில் நடைபெறக்கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் நியாயம் உள்ளது. ஆனால் இப்போது வழக்கு முடிந்து தீர்ப்பும் சொல்லி, சிறையிலும் வைத்தாகிவிட்டது. இப்போது கர்நாடகாவுக்கும், அந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அப்படியிருக்கும்போது ஜெயலிலதாவை பெங்களூர் சிறையில் வைத்திருப்பதால், இம்மாநில போலீசாருக்குதான் கூடுதல் வேலைப் பளு ஏற்படுகிறது. இரு மாநில உறவில் நல்லிணக்கம் கெடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே, ஜெயலலிதாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா தனது மீதான தீர்ப்பை எதிர்த்து, ஹைகோர்ட், உச்சநீதிமன்றம் என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அதற்காக கர்நாடகா பளு சுமக்க முடியாது. இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்.
தேவகவுடாவும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள் என்பதும், இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட மூன்றாவது அணியில் அதிமுக, மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications