மத்திய அரசுக்கு ஆதரவா? "தேவைப்படும் போது முடிவு" - ஜெ. பேட்டி
டெல்லி: ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து தேவைப்படும் போது முடிவெடுப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிட நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது 64 பக்க கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். அதில் தமிழக வாழ்வாதார பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, தமிழகத்துக்கான நிதித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதிகயை விரைந்து தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குழுவை விரைவில் அமைக்கவும் வலியுறுத்தினேன். கூடங்குளம், நெய்வேலி மின்சாரத்தில் 15% தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரினேன்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை தேவை; பஹ்ரைனில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கைகளை மிகவும் பரிவுடன் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.
அப்போது ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, லோக்சபாவில் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரவு அளிகக் தேவையில்லை. ராஜ்யசபாவில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கேற்ப அப்போது முடிவு எடுக்கப்படும்.