ஜெயலலிதா சொத்து விவரங்கள் ஹைகோர்ட்டில் தாக்கல்! தவறான பட்டியல் என்கிறார் பவானிசிங்!!
பெங்களூரு: ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் விவரங்களை அவரது வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார். ஆனால் அதில் தவறு இருப்பதாக கூறி அரசு வக்கீல் பவானிசிங் ஏற்க மறுத்து வாதம் செய்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று 13வது நாளாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா சார்பு வழக்கறிஞரான, நாகேஸ்வரராவ், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக கூறப்படும் ரூ.66 கோடி மதிப்புக்கான சொத்துப் பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்தார்.
ஆனால் இதை ஏற்க அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்து விவரங்கள் தவறாக கூறப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார். சொத்துக்கள் சுதாகரன், சசிகலாவுக்கு சொந்தம் என பட்டியலில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தவறு என்றும், ஜெயலலிதா தவிர வேறு யாரிடமும் சொத்துக்கள் இல்லையென்றும் பவானி சிங் வாதிட்டார். ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்து என்பதாலேயே, சிறப்பு நீதிமன்றத்தில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.