'ஜெயந்தி வரி' வாங்கிய ஜெயந்தி நடராஜன்: நரேந்திர மோடி தாக்கு
கோவா மாநிலம் பனாஜியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, விற்பனை வரி, சுங்க வரி என பல்வேறு வரிகளைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக ஜெயந்தி வரி பற்றி கேள்விப்படுகிறேன்.
அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயந்தி வரியை செலுத்தவில்லை என்றால் எந்தக் கோப்புகளும் நகராதாம், அப்படியே தேங்கி நின்றுவிடுமாம். அதனாலேயே அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது என்றார்.
ஜெயந்தி நடராஜன் பதிலடி
ஆனால் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், குஜராத் அரசின் சில திட்டங்களுக்கு நான் ஒப்புதல் அளிக்காததால், தன் மீது தனிப்பட்ட முறையில் உள்நோக்கத்தோடு மோடி தாக்குதல் நடத்துவதாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் மாநில அரசின் திட்டங்களால் குஜராத்தில் சுற்றுச்சூழல் மோசமாக சீர்கெட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள ஜெயந்தி நடராஜன், அதனை தான் எதிர்த்ததன் காரணமாகவே குறிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.